ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 49) - செந்நாய், தவளை, நண்டு, நாய், நீர்நாய்

           குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 49) -  செந்நாய், தவளை, நண்டு, நாய், நீர்நாய்



செந்நாய்

    இது பெரும்பாலும் பாலை நிலத்துக்குரியது; சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இது விலங்குகளை வேட்டை யாடி உண்டு சிறு பள்ளத்தில் உள்ள நீரை உண்ணும். புலிக்கு இவ்விலங்கு உணவாகும்.
 
தவளை

    தவளையின் வாய் கிண்கிணியின் வாய்க்கு உவமை கூறப்படுகின்றது. இதன் இனமாகிய தேரை சுனையில் வாழ்வது; பகுவாயை உடையது; தட்டைப் பறையைப் போல ஒலிப்பது.
 
நண்டு

    இது ஞெண்டு எனவும் வழங்கப்படும்; கொக்கிற்கு அஞ்சும்; நீர்த்துறைகளிலுள்ள மரங்களின் வேரில் வளை அமைத்துக் கொண்டு வாழும்; அலைகளால் தன்மனை சிதைக்கப்படும் போது வருந்தி ஓடும். இதன் கால்கள் வளைந்து இருக்கும். கடற்கரையில் விளையாடும் மகளிர் இதனை அலைத்து விளையாடுவர். இதற்கு அலவனாட்டுதல் என்று பெயர். நண்டு ஓடும்பொழுது மணலில் கோடுகள் உண்டாகும்; அவை கோலம் செய்தாற்போலத் தோற்றும். பொன்னிறம் உள்ள கோடுகளை உடைய ஒருவகை நண்டு உண்டு.

நாய்

    தலைவன் வேட்டையாடும் பொருட்டு வருகையில் நாயோடு வருவான். அது கடமா முதலிய விலங்குகளைத் துரத்தி அலைத்து அவனுக்குத் துணை புரியும். சில சாதியினர் தம்முடைய வீடுகளில் நாயை வளர்ப்பர். அவர் வீட்டு வாயிலில் அது காவல் புரியும். அங்ஙனம் நாய் இல்லாத அந்தணர் வீட்டு வாயிலை ஒரு புலவர், “நாயில் வியன்கடை” என்று சிறப்பிக்கின்றார்.
 
நீர்நாய்

    இது நீரில் வாழ்வது; பிரம்பின் தூற்றில் தங்கி இருக்கும். இது வாளை மீனை உணவாகக் கொள்ளும். இதன் உடலிலே கோடுகள் இருக்கும் என்றும் அவை பிரப்பம்பழத்தின் மேலுள்ள கோடுகளைப் போலத் தோற்றுமென்றும் தெரிய வருகின்றது.
 
(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...