ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 48) - குரங்கு

                                            குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 48) -  குரங்கு


குரங்கு

    இதில் பலவகைகள் உண்டு. முசுவென்னும் இனத்தின் முகம் கரியதாக இருக்கும். கருங்குரங்கின் உடல் முழுவதும் கரியதாகவும் முகம் வெள்ளியதாகவும் இருக்கும். கருங்குரங்கை ஊகம் என்பர். குரங்கின் பல் கூரியது; வாய் சிவப்பாக இருக்கும். இதன் ஆண் கடுவன் கலை என்றும், பெண் மந்தி என்றும், குட்டி குருளை பறழ் பார்ப்பென்றும் வழங்கப்படுகின்றன. குரங்கு மிக உயர்ந்த மரங்களிலும் ஏறிப் பாயும் இயல்பினது; மாம்பழத்தைக் கடித்து உண்ணும்; பலாப்பழத்தைத் தோண்டிச் சுளையை உண்ணும்; தளிரை மேயும். மகளிர் பாறையில் பரப்பிய தினையை அவர்கள் சோர்ந்த சமயம் பார்த்து மந்தி தன் குட்டிகளோடு கவர்ந்து செல்லும் காட்சி ஒன்றை ஒரு புலவர் அமைக்கின்றார்.

    மந்தி தன் குட்டியை அகனுறத் தழுவிக் கொள்ளும். ஆண் குரங்கும் பெண் குரங்கும் ஒன்றனை ஒன்று காதல் செய்து வாழும் வரலாறுகள் சில இதில் காணப்படுகின்றன; தன்னுடைய கணவனாகிய ஆண் குரங்கு இறந்த பிறகு கைம்மை வாழ்க்கையை விரும்பாத பெண் குரங்கு மரமேறவும் தெரியாத இளைய குட்டியைத் தன் இனத்திடத்தே கையடை கொடுத்த பின்னர் உயிரை மாய்த்துக் கொள்ளும் என்பதும், ஆண் குரங்கு மரத்தின் மேல் இருந்து பழங்களை உதிர்ப்பக் கீழிருந்து மந்தியும் குட்டிகளும் அவற்றைக் கைக்கொண்டு தின்னுமென்பதும் இதற்குரிய உதாராணங்களாம். முசுவின் குருளை பாறையில் மயிலீன்ற முட்டையை அதன் அருமை தெரியாமல் உருட்டி விளையாடுவதை ஒருவர் தெரிவிக்கின்றார். மழைக்குக் குரங்கு அஞ்சும். தானும் தலைவனும் பழகும் இடத்தில் குரங்கு சாட்சியாக இருந்ததென்று ஒரு தலைவி பகர்கின்றாள்.

(தொடரும்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...