குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 43) - முள் முருங்கை, முள்ளிச்செடி, மூங்கில்
முள் முருங்கை
இம்மரம் கவிரென்று வழங்கப்படுகின்றது. இதன் சிவந்த மலரின் இதழ் நாரையின் மெல்லிய
இறகிற்கு உவமையாகச் சொல்லப்படும்.
முள்ளிச் செடி
நெய்தல் நிலத்தில் காணப்படுவது; இது முண்டகமென்றும் வழங்கும். இதன் மலர் மிக்க
குளிர்ச்சியை உடையது. இச்செடியில் உள்ள முள் வளைந்திருக்கும்; அதற்கு அணிலின் பல்லை
உவமிப்பர். அதன் மலரில் தாது நிறைந்திருக்கும். அது கரிய நிறம் உடையது.
மூங்கில்
மூங்கிலில் பல வகை உண்டு. குறிஞ்சி நிலத்தில் மிகுதியாகவும் பாலை நிலத்தில்
சிறிதளவாகவும் காணப்படும். அமை, கழை, பணை, முந்தூழ், வெதிர், வேய், வேரலென்னும் இதன்
பெயர்கள் இந்நூலில் வந்துள்ளன. இயல்பாக வளர்ந்த மூங்கில் தொகுதியே மலைச்சாரலில் வேலி
போல அமைந்திருக்கும். மூங்கில் அடர்ந்த இடத்தைச் சோலையென்று கூறுவதும் உண்டு. மூங்கிலை
யானை உவந்துண்ணும். இதனை யானை வளைத்து விடுங்கால் மீனெறி தூண்டிலைப் போலவும் செலுத்தி
விட்ட குதிரையைப் போலவும் விரைந்து மேலெழும்பும் காட்சியைச் சில புலவர் புனைந்து கூறியுள்ளனர்.
மலைச் சாரலில் மூங்கில் மிக உயர்ந்து மேலே உள்ள தேனடையைக் கிழித்து நிற்குமொரு செய்தி
ஒரு செய்யுளில் காணப்படும். இதனை மகளிர்தோளுக்கு உவமிப்பர். முள்ளில்லாத மூங்கிலும்
உண்டு.
பாலை நிலத்தில் உள்ள மூங்கில் உலர்ந்து போய் வளர்ச்சி பெறாமல் கூழையாக நிற்கும்.
மலைத்தேனை எடுப்பதற்கு ஒற்றை மூங்கில் கண்ணேணியாகப் பயன்படும்.
(தொடரும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக