புதன், 1 நவம்பர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 37) - நெருஞ்சி, நெல், நெல்லி, நொச்சி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 37) - நெருஞ்சி, நெல், நெல்லி, நொச்சி

நெருஞ்சி

    முல்லை நிலத்துக்குரியது இது. இதன் இலை மிகவும் சிறியது. இதன் மலர் கண்ணிற்கு இனியதாகத் தோற்றினும் அப்பால் இன்னாத தாகிய முள்ளை உண்டாக்குதலின், முன் இனியனாக இருந்து பின் இன்னா செய்யும் தலைவனுக்கு உவமை கூறப்படுகின்றது; கதிரவன் எந்தத்திசையில் இருப்பினும் அத்திசையையே நோக்கி நிற்கும் இயல்பு வாய்ந்தது.
 
நெல்

    இது மருத நிலத்துக்குரியது; வெண்ணெல், செந்நெல் என இருவகைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் செந்நெல் உயர்ந்தது. கதிரில் உள்ள முதிர்ந்த பச்சை நெல்லை உரலில் இட்டு மகளிர் அவலாக்குதற்கு இடிப்பதுண்டு. அது பாசவல் எனப்படும். தொண்டி என்னும் ஊரில் வெண்ணெல் மிகுதியாக விளைந்ததென்று ஒருசெய்யுளால் தெரிய வருகின்றது. நெற்கதிரை நாரை நயந்துண்ணும். உள்ளீடில்லாத நெல்லைப் பதடியென்பர். நெற்பொரியைப் புன்க மலருக்கு உவமை கூறுவர்.
 
நெல்லி

    குறிஞ்சிக்கும், குறிஞ்சி திரிந்த பாலைக்கும் உரியது. இதன் காய் புளிச் சுவையுடையதாதலின், ‘நெல்லியம் புளி’, ‘தீம்புளி நெல்லிஎன வழங்கும். பாலை நிலத்தில் செல்வார் இதன் காயை உண்டு விடாய் போக்கிக் கொள்வர். நெல்லிக் காயைத் தின்று நீர்குடித்தல் வழக்கம். அதனை வௌவாலும் மரையினமும் உண்ணும் செய்தி இந்நூலுள் கூறப்படும். தருமத்தின் பொருட்டு வழிகளில் இம்மரங்கள் வளர்க்கப்படும்.
 
நொச்சி

    நொச்சியில் பல வகைகள் உண்டு. இதில் மலைநொச்சி கூறப்பட்டிருக்கிறது. இதன் பூ கரிய நிறமுடையது; அது நீல மணியைப் போலத் தோற்றும். யாமத்தில் அப்பூ உதிரும். இதன் இலைக்கு மயிலடி ஒப்புக் கூறப்படும்.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...