வெள்ளி, 20 அக்டோபர், 2017

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 34) - கோங்கு, சந்தனம், சிலை, சேம்பு

                குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 34) -  கோங்கு, சந்தனம், சிலை, சேம்பு

கோங்கு

    பாலை நிலத்திற்குரிய மரம் இது; இலவின் வகையைச் சார்ந்தது; இளவேனிலில் மலர்வது. இது மலர்கின்ற காலத்தில் இதன் இலைகள் எல்லாம் உதிர்ந்து விடும். இலையில்லாத சினையில் வண்டு ஆர்க்கும். இதன் அரும்புக்கு மகளிரது நகிலை ஒப்பிடுவர்.
 
சந்தன மரம்

         குறிஞ்சி நிலத்துக்குரியது. பொதியின்மலைச் சந்தனமும் முள்ளூர்க் கானத்துச் சந்தனமும் இந்நூலில் சிறப்பிக்கப் பெறுகின்றன. சந்தனம் வேனிற் காலத்தில் தண்ணிதாக இருக்கும். தலைவன் மலைச் செஞ்சந்தனக் குழம்பை அணிந்து இரவில் தலைவி வாழும் இடத்திற்கு வருதலை ஒரு புலவர் சொல்லுகின்றார். மகளிர் சந்தனப்புகையைக் கூந்தலுக்கு ஊட்டுவது வழக்கம்.
 
சிலை
   

   குறிஞ்சி நிலத்து மர வகைகளில் இதுவும் ஒன்றென்று தெரிகின்றது. மிக்க வலிமையும் நெகிழ்ச்சியும் உடையதாதலின் இதனால் வில்லை அமைத்து வேட்டுவர் வேட்டை ஆடுவர். சிலை அமைத்தற்குச் சிறந்ததாதலின் இப்பெயர் பெற்றது போலும்.
 
சேம்பு


  மலைப்பக்கத்தில் வளரும் ஒருவகைச் சேம்பு இந்நூலிற் சொல்லப்படுகின்றது. இதன் இலை மிகவும் பெரியது. காற்றால் அசையும் அவ்விலைக்குக் களிற்றின் செவியை ஒருவர் உவமிக்கின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 33) - கூதளி, கொறுக்காந்தட்டை, கொன்றை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 33) - கூதளி, கொறுக்காந்தட்டை, கொன்றை

கூதளி

    கூதளம், கூதாளமெனவும் இது வழங்கும். மலைச்சாரலில் வளர்வது. இதன் காம்பு குறியது. இதன் மலர் உட்டுளையை உடையது. கார்காலத்தில் மலர்வது. கைவளைக்கு அம்மலர் உவமிக்கப்படுகின்றது.
 
கொறுக்காந்தட்டை

                இது கொறுக்கைச்சி என வழக்கிலும், எருவை எனச் செய்யுளிலும் ஆளப்படும். அருவியுள்ள இடங்களில் வளர்வது இது. இதனை யானை உணவாகக் கொள்ளுமென்று தெரிகின்றது.
 
கொன்றை


    முல்லை நிலத்துக்குரிய மரங்களுள் ஒன்று இது. கார்காலத்தில் மலர்வது. முல்லை நிலத்தினர் இதன் மலர்கண்டு கார்காலம் வந்ததை அறிந்து கொள்வர். இது மாலைபோல மலர்வதாதலின் இதன் பூங்கொத்து, “கொடியிணர்என்று சிறப்பிக்கப்படும். இதன் மலர் மஞ்சள் நிறமுடையதாதலின் பொன்னுக்கும், பொன்னரி மாலைக்கும், பொற்காசிற்கும், கிண்கிணிக் காசிற்கும், பசலைக்கும் ஒப்பாகச் சொல்லப்படும். குருந்தும் கொன்றையும் ஒருங்கு சேர்த்துக் கூறப்படும்.

(தொடரும்)


குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 32 - குளவி, குறிஞ்சி, குன்றி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 32 - குளவி, குறிஞ்சி, குன்றி

குளவி

     மலை மல்லிகையைக் குளவி என்பர். காட்டு மல்லிகையையும் அங்ஙனம் கூறுவதுண்டு. இது பெரும்பாலும் குறிஞ்சி நிலத்திலும் சிறுபான்மை பாலை நிலத்திலும் காணப்படும். குறிஞ்சி நிலத்தில் மலரோடு முளைத்த இதனை மலைவாணர் களையாகக் களைந்தெறிவர். பாலை நிலத்தில் நீருள்ள சிறு பள்ளங்களுக்கு அருகில் இது வளரும்; இதன் மலர் அந்நீரில் விழுந்து அழுகியிருக்கும். நறுமணம் உடைய இதன் மலரைத் தலைவியின் நுதல் மணத்திற்கு உவமை ஆக்குவர். இதன் இலைகள் பெரியனவாக இருக்கும்.
 
குறிஞ்சி

    குறிஞ்சி நிலத்திற்கு அடையாளமாக விளங்குவது இது. இதன் தண்டு கரிய நிறமாக இருக்கும். இதன் மலரில் தேன் மிகுதியாக உண்டு. இம்மலர் பல வருஷங்களுக்கு ஒரு முறை மலர்வதென்று கூறுகின்றனர்.
 
குன்றி


    இது கொடி வகையுள் ஒன்று. இதன் வித்தை மணி என்பர். அது சிவப்பு நிறம் உடையதாதலின் முருகனது செந்நிற ஆடைக்கு உவமையாகக் கூறப்படுகின்றது.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 31 - குவளை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 31 - குவளை


    இது குறிஞ்சி நிலத்திலுள்ள சுனைகளில் வளர்வது; “சுனைக் குவளைஎனச்சிறப்பிக்கப்பெறும். கருங்குவளை, செங்குவளை என இருவகை இதில் உண்டு. அவற்றுள் கருங்குவளை மகளிர் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும். இது நீர்நிறைந்த இடத்தில் வளம் பெற்று வளர்வது. இம்மலர் மிக்க மென்மை உடைய தாதலின் வண்டுகள் படிந்த அளவில் அழகு கெடுவது. இதன் நறுமணத்தைத் தலைவியின் மேனி, கூந்தல், நுதல் என்பவற்றின் இயற்கை மணத்திற்கு உவமையாகக் கூறுவர். குவளையோடு காந்தளையும் முல்லையையும் தொடுத்தமைத்தலுண்டு. இதன் காம்பு குறியது. மகளிர் இதனைக் கூந்தலில் புனைதலும் தழையிடையிற் கலந்து தொடுத்து அணிதலும் வழக்கம். தலைவன் குவளைக் கண்ணியை அணிந்து வருதலும் குவளை மாலையைத் தலைவிக்குக் கையுறையாக அளித்தலும் மரபு.

(தொடரும்)

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...