ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 30) - காயா, குரவம், குருந்தம்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 30) -  காயா, குரவம், குருந்தம்

காயா மரம்

    இக்காலத்தில் இது காசாவென வழங்குகின்றது. இது முல்லை நிலத்திற்குரிய மரம்; கார்காலத்தில் மலர்வது; இதன் மலர் நீல நிறமுடையது. காயா மரத்தின் பூக்கெழு பெருஞ்சினை மெல்லிய மயிலின் கழுத்தைப் போலத் தோற்றுவதாக ஒரு புலவர் பாடுகின்றார்.
 
குரவம்

    குராவெனவும் இது வழங்கும். இது பெரும்பாலும் பாலை நிலத்திற்கு உரியதாயினும் நெய்தல் நிலத்தில் வளர்ந்ததாக ஒரு செய்யுளில் கூறப்படுகின்றது. இது திணை மயக்கத்தின்பாற் படும். அந்நிலத்தில் புன்க மரத்திற்கருகில் பல மலர்களால் நிறைந்து இம்மரம் விளங்குவதை ஒரு புலவர் புனைகின்றார்.
 
குருந்த மரம்

    முல்லை நிலத்திற்குரிய மரம் இது. கார்காலத்தில் மலர்வது; கொன்றை மரத்தோடு சேர்த்துச் சொல்லப்படுவது.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள்

காந்தள்

    குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்ந்தமை பற்றி மலைச் சாரலில் உள்ள ஊர்களை இப்பூவின் விசேடத்தால் குறிப்பர்; “காந்தள் வேலிச் சிறுகுடி”, "காந்தளஞ் சிறுகுடி” எனக் கூறுதல் காண்க. இது மலை முழுவதும் கமழும் மணத்தை உடையது. மலைச்சாரலில் அருவியின் அருகே வளரும். கொத்துக் கொத்தாக மலர்வதாதலின் ‘‘குலைக் காந்தள்” என வழங்கப்படும். இதனிடத்துள்ள நறுந்தாதைத் தும்பி என்னும் வண்டு ஊதும். வண்டு வாய் திறக்க இதன் போது மலர்வதற்கு நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட கடனறி மாக்கள் இடம் விட்டு ஆதரவு செய்து உபசரித்தலை ஒரு புலவர் உவமையாகச் சொல்லுகின்றார்.

    தலைவன் தலைவிக்கு அளிக்கும் கையுறைகளுள் காந்தள் மலரும் ஒன்று. ஊர்ப்பொது இடத்தில் இது வளர்ந்திருக்கும். அங்குள்ள துறுகல்லில் மலர்ந்து படிந்து விளங்கும். இதன் மலரை யானை முகத்தில் உள்ள புண்ணுக்கும், நீண்ட காம்போடு கூடிய பூவைப் படத்தை விரித்த பாம்பிற்கும் கை விரலுக்கும் உவமையாக எடுத்தாள்வர். தலைவனது மலையில் இருந்து அருவியில் வந்த காந்தள் கொடியின் கிழங்கைத் தலைவி எடுத்து முயங்கித் தன் வீட்டிற்குக் கொணர்ந்து நட்டு வளர்த்துப் பாதுகாத்தாளென்றதொரு செய்தி ஒரு செய்யுளில் காணப்படும்.

    வெண்காந்தள், செங்காந்தள் என இருவகை இதில் உண்டு. செங்காந்தள் தோன்றி என்றும் வழங்கப்பெறும். அதனைக் குருதிப்பூ என்று கூறுவர். கோழியின் கொண்டைக்கு உவமையாக அது சொல்லப்படும்.

    காந்தளோடு முல்லை, குவளை என்பவற்றை இடையிட்டுக் கோதையாகக் கட்டுவதுண்டு. அக் கோதையைத் தலைவியின் மேனிக்கு ஒரு தலைவன் ஒப்புரைக்கின்றான். தலைவியது மேனியின் மணத்திற்கும் நுதலின் மணத்திற்கும் இம் மலரின் மணத்தை உவமித்தல் மரபு.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 28) - கவலைக்கிழங்கு, கள்ளி, காஞ்சி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 28) -  கவலைக்கிழங்கு, கள்ளி, காஞ்சி

கவலைக் கிழங்கு

    இது முல்லை நிலத்திற்குரியது. வேடர் இதனை அகழ்ந்து உணவாகக் கொள்வர்.
 
கள்ளி

     பாலை நிலத்திற்குரியது. அந் நிலத்தின் வெம்மையால் இதன் அடி பொரிந்திருக்கும்; காய்கள் வெடிக்கும்; அங்ஙனம் வெடிக்கும்போது ஒலி உண்டாகும்; அதனை, “கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி” என்பர் ஒரு புலவர். இதன் முள் கிளைத்திருத்தலை அவர் இதில் குறித்திருக்கின்றார்.
 
காஞ்சி

    மருத நிலத்துக்குரிய மரம் இது. வயல்களுக்கு அருகில் வளர்ந்த இம் மரத்திலுள்ள பூந்தாது தம்மேல் உதிரும் வண்ணம் இதன் கிளையை உழவர் வளைக்கும் செய்தி ஒரு பாட்டில் காணப்படும். இதன் மலர் மணம் உடையது. இதன் பூங்கொத்துக்குப் பயறு உவமையாகச் சொல்லப்படும்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 27) - கரும்பு, கருவிளை

 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 27) -  கரும்பு, கருவிளை

கரும்பு

    நிலவளத்தைப் புலப்படுத்துவதாகிய கரும்பு மருத நிலத்திற்குரியது. இதனைப் பாத்திகட்டி நீர்பாய்ச்சி விளைவிக்கும் செய்திகளைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். யானை மிக்க விருப்பத்தோடு இதனை உண்ணும். நுனிப் பகுதியினும் அடிப் பகுதி இனிமை உடையதாக இருத்தலின் தலைவியின் எயிற்றில் ஊறும் நீர் அவ்வடிக் கரும்பின்கண் எறிந்த துண்டத்தைத் தின்றாற் போல இனிக்கின்றதென்று ஒரு தலைவன் பாராட்டுகின்றான் (267). இதன் மலர் வெண்ணிறம் உடையது; மணம் அற்றது; வாடை வீசுங் காலத்தில் மலர்வது. மலராமல் முகைப் பருவத்துள்ள கரும்பின் கூம்பிற்குக் கருப்ப முதிர்ந்த பச்சைப் பாம்பை ஒரு புலவர் உவமை ஆக்குகின்றார்.
 
கருவிளை

    இதன் மலர் நீலநிறம் உடையதாதலின் அதற்கு மயிற் பீலியை உவமை கூறுவர். அது பொறிகளை உடையது. வாடை அம்மலரை அலைப்பதை ஒரு புலவர் சொல்லுகின்றார்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 26) - ஐவனம், ஓமை

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 26) -  ஐவனம், ஓமை

ஐவனம்

    ஐவனம் என்பது மலையின்மேல் விளையும் நெல் வகையுள் ஒன்று. அருவியின் அருகே விதைத்து விளைக்கப்படுவது. குறிஞ்சி நில மக்களுக்குரிய உணவுப் பொருளாகப் பயன்படுவது.
 
ஓமை மரம்

    ஓமை என்பது பாலை நிலத்து மரங்களுள் ஒன்று. இதன் அடி மரம் பொரிந்து பொலிவற்றிருக்கும். இம் மரங்கள் நிறைந்த இடத்திற்குப் பாழூரை ஒரு புலவர் ஒப்புரைக்கின்றார். இம் மரம் செந்நிறமுடையது. இதன் பட்டையை யானை உரித்து உண்ணும். இதன் குறிய நிழலில் கன்றில்லாத ஒற்றைப் பசு வெயிற்கு அஞ்சித் தங்கியிருக்கும் செய்தி ஒரு செய்யுளில் காணப்படுகின்றது (260). இதன் கவட்டினிடையே பருந்துகள் இருந்து ஒலிக்கும்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 25) - எள், ஐயவி

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 25) -  எள், ஐயவி

எள்

    இஃது எண்ணென்றும் வழங்கும்; மழை அதிகமாகப் பெய்தால் எள்ளின் காய் அழுகி உள்ளீடெல்லாம் போய் விடும். அத்தகைய காயைச் சிதட்டுக் காயென்பர் (261); சிதடு - குருடு.
 
ஐயவி

    ஐயவி என்பது வெண்சிறுகடுகு. இது மிகச் சிறிதாதலின் ஞாழற் பூவிற்கு இதனை உவமை ஆக்குவர். “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்” (50) என்பது காண்க.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 24) - உழுந்து, எருக்கு

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 24) -  உழுந்து, எருக்கு

உழுந்து

    முல்லை நிலத்துப் புன்செய் விளைபொருள்களுள் ஒன்றாகிய உழுந்தின் அடிக்குக் குறும்பூழ்ப் பறவையின் காலை ஒரு நல்லிசைப்புலவர் உவமை கொள்கின்றார். வேரின் சிறு பகுதி வெளித்தோன்றிய அடித்தண்டின் தோற்றத்திற்கு அவ்வுவமை மிகப் பொருத்தமாக இருக்கின்றது. முன் பனிக் காலத்தில் உழுத்தங்காய் முதிரும். அதனை மானினம் கவர்ந்து உண்ணும். உழுந்து பின் அதன் காயைக் கழுந்தினால் அடித்து உடைப்பது வழக்கம்.
 
எருக்கு

    ‘குவிமுகி ழெருக்கு’ என்று இது கூறப்படுகின்றது. மடலேறும் ஆடவர் இதன் மலராலாகிய கண்ணியைச் சூடி வீதியிலே வருவர்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 23) - ஈங்கை, உகாய்

  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 23) -  ஈங்கை, உகாய்

ஈங்கை

    இஃது ஒரு வகைக் கொடியென்று தோற்றுகின்றது. இது நுண்ணிய முள்ளை உடையது. கூதிரக் காலத்தில் மலர்வது. இதன் அரும்பு செந்நிறத்தை உடையது. இதன் மலரில் பஞ்சி போன்ற துய் இருத்தலின், “வண்ணத் துய்ம்மலர்” என்று சிறப்பிக்கப் பெறும்.
 
உகாய்

    இது பாலை நிலத்தில் உள்ள மரங்களில் ஒன்று. உகாயென்று வழங்குவதே பெரும்பான்மை மரபாயினும் உகாவென்னும் பாடம் சில இடங்களிலே காணப்படுகின்றது. இதன் அடி மரம் சாம்பல் போன்ற நிறமுடையது; அதற்குப் புறாவின் புறத்தை உவமையாகக் கூறுவர்; “புன்கா லுகாஅய்”, “புல்லரை யுகாஅய்” என்ற தொடர்களால் அது மங்கிய நிறத்தை உடைய தென்பது போதரும். இம்மரத்தில் கனிகள் செறிந்திருக்கும்; அவை உருண்டையாகவும் மஞ்சள் நிறமாகவும் இருத்தலின் அவற்றிற்குப் பொற்காசை உவமை ஆக்குவர். இம் மரம் பாலையின் வெம்மையால் தழைச் செறிவின்மையின் இதன் நிழல் இடையிட்டுத் தோன்றும்; அதனை “வரிநிழல்” என்பர். அந் நிழலில் மலைப்பசு தங்கியிருத்தல் ஒரு செய்யுளில் கூறப்படுகின்றது.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 22) - இற்றி

                                        குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 22) - இற்றி

இக் காலத்தில் இச்சி, இத்தியென வழங்குவதும் இம்மரமே. இதன் விழுது ஆலம் விழுதைப் போல நீண்டதன்றாதலின் “புல்வீழ்” என்று சொல்லப்படுகிறது. கல்லின்மேல் முளைத்த இற்றியின் வேர் அக்கல்லின்மேற் படரும்; அது சேய்மையில் இருந்து பார்ப்பவர்களுக்கு அருவியைப் போலத் தோன்றும்.

(தொடரும்)

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 21) - இருப்பை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 21) - இருப்பை

     பாலை நிலத்துக்குரிய மரங்களுள் இருப்பையும் ஒன்று. இது வேனில் காலத்தில் மலரும் என்று தெரிகின்றது. இதன் வெள்ளிய மலர் காம்பினின்றும் கழன்று பாலை நிலத்தில் உள்ள சிறுவழி மறையும்படி உதிர்ந்து கிடக்கும் காட்சியை ஒரு புலவர் விளக்குகின்றார்.

(தொடரும்)

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...