திங்கள், 24 மார்ச், 2014

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பயிலரங்கு (23,24.03.14)

       திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழியல்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தொல்காப்பியக் கவிதையியலும் சங்க இலக்கியங்களும் என்னும் பொருண்மையில் பத்து நாள் பயிலரங்கு ஒன்றினை 22.03.2014 முதல் 31.03.2014 வரை நடத்துகின்றன. தமிழியலில் ஆய்வும் தோய்வும் பயிற்சியுமுடைய பேராசிரியர் முனைவர் உ. அலிபாவா அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றார்.
     தொல்காப்பியத்தின் கவிதையியல் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் போதிய அளவில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. தொல்காப்பியருக்குப் பின்னர் வந்த இலக்கண நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும்கூடத் தொல்காப்பிய மரபுகளைப் போற்றியதாகத் தெரியவில்லை. இச்சூழலில் தொல்காப்பியக் கவிதையியலைச் சங்கப் பாடல்களுடன் ஒப்பிட்டு நோக்கும் வகையில் பயிலரங்கை நடத்திவரும் முனைவர் உ. அலிபாவா அவர்கள் பாராட்டுக்குரியவர். அப்பயிலரங்கில் பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய மயிலம் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்; சங்க அகப்பாடல்களில் ஒப்புமை மெய்ப்பாடுகள் ஆகிய இரு தலைப்புக்களிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் தொல்காப்பியக் கைக்கிளையும் சங்க அகப்பாக்களும்; தொல்காப்பிய வனப்பில் அழகு ஆகிய இரு தலைப்புக்களிலும் உரையாற்றினர். அப்பயிலரங்கின் காட்சிகள் இவை.


 பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உ. அலிபாவா அவர்களின் அறிமுகவுரை.
 முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : தொல்காப்பிய மெய்ப்பாடுகள். 
முனைவர்ப் பட்ட ஆய்வாளர் இமாகுலேட் அவர்களின் நன்றியுரை.
முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : சங்க அகப்பாடல்களில் ஒப்புமை மெய்ப்பாடுகள்.
 முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : தொல்காப்பியக் கைக்கிளையும் சங்க அகப்பாக்களும். 

 பயிலரங்கச் சுவைஞர் பகுதியில் முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்களும், முனைவர் உ. அலிபாவா அவர்களும்.
 முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : தொல்காப்பிய வனப்பில் அழகு.
முனைவர்ப் பட்ட ஆய்வாளர் அய்யனார் அவர்களின் நன்றியுரை.
 பயிலரங்கச் சுவைஞர்

ஞாயிறு, 16 மார்ச், 2014

புதுச்சேரிப் பல்கலைக் கழகப் பயிலரங்கு (11.03.2014)



   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கை பெற்றுப் புதுச்சேரிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் மெய்ப்பாடுகள் என்னும் தலைப்பில் பத்து நாள் பயிலரங்கு (05.03.14 - 14.03.14) ஒன்றினைப் பேராசிரியர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். தமிழ் இலக்கணக் கோட்பாடுகளில் பரவலாகக் கவனம் பெறாத கோட்பாடாகிய மெய்ப்பாடுகள் குறித்த பயிலரங்கினை ஒருங்கிணைத்தமைக்காகப் பேராசிரியர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 
    பத்து நாள்கள் நடந்த அப்பயிலரங்கில் 11.03.14 அன்று முற்பகல் அமர்வில் முனைவர் ஆ. மணி அவர்கள் திருக்குறளில் எண்வகை மெய்ப்பாடுகள் என்னும் தலைப்பிலும், முனைவர் நா. இளங்கோ அவர்கள் கலித்தொகையில் மெய்ப்பாடுகள் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அப்பயிலரங்கின் காட்சிகள் இவை.




பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்களின் அறிமுகவுரை.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : திருக்குறளில் எண்வகை மெய்ப்பாடுகள்.





பயிலரங்கச் சுவைஞர் பகுதியில் பேராசிரியர் முனைவர் மதியழகன் அவர்கள்.

ஆய்வாளர் வினாக் கேட்டல்.
ஆய்வாளர் வினாக் கேட்டல்.
ஆய்வாளர் வினாக் கேட்டல்.
ஆய்வாளரின் நன்றியுரை.
சுவைஞர் பகுதியில் முனைவர் ஆ. மணி, முனைவர் நா. இளங்கோ ஆகியோர்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இளமதி சானகிராமன் அவர்களின் அறிமுகவுரை.
முனைவர் நா. இளங்கோ அவர்களின் உரை: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்.
அழைப்பிதழ்
 அழைப்பிதழ்


புதுச்சேரி, அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரிக் கருத்தரங்கு (25.02.2014)

      புதுச்சேரிக்கு அருகில் உள்ள சேதராப்பட்டில் இயங்கி வரும் அரவிந்தர் கலை, அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை பகுதி ஒன்றில் தமிழ் பயிலும் மாணவர்களுக்காகச் சங்க இலக்கியம் பற்றிய உரைவீச்சு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, வைணவக் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றி ஓய்வுபெற்ற மதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய பேராசிரியர் முனைவர் இலக்குமி நாராயணன் ஐயா அவர்களின் சீரிய வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்று வரும் அக்கல்லூரியில் சங்க இலக்கியம் கற்றல் என்னும் பொருளில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்காகக் கல்லூரி முதல்வர்  முனைவர் இலக்குமி நாராயணன் ஐயா அவர்களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் சீனிவாசன் அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் லோகநாதன் அவர்களுக்கும் நன்றி.  
   முனைவர் இலக்குமி நாராயணன் ஐயா அவர்களின் தமிழன்பும் இளைஞர்களை ஆற்றுப்படுத்தி ஊக்குவிக்கும் பண்புக்கிழமையும் போற்றுதலுக்குரியன. அவர்தம் தலைமையின் கீழ் இயங்கும் கல்விக்கோயிலாக அக்கல்லூரி திகழ்கின்றது என்றால் அது மிகையில்லை. கருத்தரங்கக் காட்சிகள் இவை.

முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : சங்க இலக்கியம் கற்றல். மேடையில் கல்லூரி முதல்வர் முனைவர் இலக்குமி நாராயணன் அவர்கள்.
கருத்தரங்கச் சுவைஞர்.
கருத்தரங்கச் சுவைஞர்.

காந்தி கிராமக் கிராமியப் பல்கலைக் கழகக் கருத்தரங்கு (14.02.2014)

   காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராமக் கிராமியப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்துச் சமூகவியல், பண்பாட்டியல், மொழியியல் நோக்கில் கலித்தொகை என்னும் பெயரிய மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றினைப் பிப்ரவரி 12 முதல் 14 வரை (2014) நடத்தின. அக்கருத்தரங்கினை அண்மையில் புதுதில்லிக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இளம் தமிழறிஞர் விருது பெற்ற பேராசிரியர், முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் குறிப்பிடத் தகுந்த அளவில் மரபு மாற்றங்களையும்,  சிந்தனை மாற்றங்களையும் பெற்றுள்ள நூலாகிய கலித்தொகை நுண்ணிய ஆய்வுகளைப் பெற வேண்டிய ஒரு நூலாகும். எனினும், அந்நூல் தமிழ் ஆய்வுலகில் போதிய கவனத்தைப் பெற்றுள்ளதாகவோ, செவ்விய ஆய்வுகளைப் பெற்றுள்ளதாகவோ கூற இயலவில்லை. அத்தகைய ஒரு நூலைக் கருத்தரங்கப் பொருளாகக் கொண்டமைக்காகக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் பாரட்டப்பட வேண்டியவராவார்.
         கலித்தொகைக் கருத்தரங்கில் 14.02.14 வெள்ளியன்று முற்பகலில் நடைபெற்ற அமர்வில் முனைவர் வ. தனலட்சுமி அவர்கள் கணினி மொழியியல் நோக்கில் கலித்தொகை என்னும் தலைப்பிலும், முனைவர் அ. அறிவுநம்பி அவர்கள் கலித்தொகைப் பாடல்களில் அகமரபுகள் என்னும் தலைப்பிலும், முனைவர் வ. இராசரெத்தினம் அவர்கள் கலித்தொகையும் கைக்கிளையும் என்னும் தலைப்பிலும், முனைவர் ஆ. மணி அவர்கள் கலித்தொகையில் புறச்செய்திகள் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அக்கருத்தரங்கின் காட்சிகள் இவை:

முனைவர் வ. தனலட்சுமி அவர்களின் உரை: கணினி மொழியியல் நோக்கில் கலித்தொகை
முனைவர் வ. இராசரெத்தினம் அவர்களின் உரை:  கலித்தொகையும் கைக்கிளையும்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சிதம்பரம் அவர்களின் விருந்தினர் அறிமுகவுரை.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை:  கலித்தொகையில் புறச்செய்திகள்.
ஆய்வாளர் வினாக் கேட்டல்.

கருத்தரங்கச் சுவைஞர்.
 அழைப்பிதழ்
அழைப்பிதழ்

வியாழன், 13 மார்ச், 2014

மயிலாடுதுறை அ.வ.அ. கல்லூரிப் பயிலரங்கு (01.02.2014)

  மயிலாடுதுறை, அன்பநாதபுரம் வகையறா அறத்துறைக் கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்துச் சங்க இலக்கியங்கள் கற்றல், கற்பித்தலில் பல்துறையறிவின் பங்கு என்னும் பொருண்மையில் பத்து நாள் பயிலரங்கு (29.01.2014 - 07.02.2014) ஒன்றினை நடத்தின. சங்க இலக்கியக் கற்றலுக்குப் பல்துறை அறிவின் தேவையையும் இன்றியமையாமையையும் இக்காலத்தில் பலரும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் காலத்திற்கும் பயனுடைய இப்பொருண்மையில் பயிலரங்கு நிகழ்த்தி மாணவர் உள்ளத்தில் அக்கருத்தினைப் பதியமிட்டமைக்காகப் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர் சு. தமிழ்வேலு அவர்களுக்கு   நாம் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவருக்கு நன்றி. 
     அறிவுசார் நிலையில் நிகழ்த்தப்பட்ட அப்பயிலரங்கில் முனைவர் ஆ. மணி அவர்கள் உரையாசிரியர்களும் அகப்பொருளும் என்னும் தலைப்பில் கடந்த 01.02.14 சனிக்கிழமை உரையாற்றினார். தமிழ் அகப்பொருளைப் புரிந்துகொள்ளுதலில் உரையாசிரியர்களின் துணை; துணையின்மை ஆகியவற்றை மையமிட்டு அவ்வுரை அமைந்தது. உரையாளர் அறிமுகவுரையை முனைவர் சு. தமிழ்வேலு அவர்கள் ஆற்றினார். அ.வ.அ. கல்லூரியின் புலமுதன்மையர் முனைவர் வரதராசன் அவர்கள் கருத்துரையாற்றியதோடு, மணி அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாரட்டினார். விலங்கியல் பேராசிரியராகிய முனைவர் வரதராசன் அவர்களின் தமிழிலக்கியப் புலமையும் தமிழன்பும் ஒவ்வொரு தமிழரும் பின்பற்ற வேண்டியன. அவர்தம் அன்பினைப் பெறும் வாய்ப்பு முனைவர் தமிழ்வேலு அவர்களின் அழைப்பாலும், பேராசிரியர் மோ. கீதா அவர்களின் அன்பான அறிமுகத்தாலும் வாய்த்தது. அதற்காக முனைவர் தமிழ்வேலு அவர்களுக்கும் பேரா. கீதா அவர்களுக்கும் நன்றி மலர்கள். பேராசிரியர் சாந்தகுமாரி அவர்கள் தொகுப்புரையும் நன்றியுரையும் ஆற்றினார். மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற அப்பயிலரங்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. பயிலரங்கக் காட்சிகள் இவை:   

 பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. தமிழ்வேலு அவர்களின் தொடக்கவுரை.
 கல்லூரியின் புலத்துறை முதன்மையரும் தேர்வாணையருமாகிய பேராசிரியர் முனைவர் வரதராசன் அவர்கள், முனைவர் ஆ. மணி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல்.
 கல்லூரியின் புலத்துறை முதன்மையரும் தேர்வாணையருமாகிய பேராசிரியர் முனைவர் வரதராசன் அவர்களின் கருத்துரை.
 முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : உரையாசிரியர்களும் அகப்பொருளும்.

தமிழ்த்துறைப் பேராசிரியர் சாந்தாகுமாரி அவர்களின் மதிப்பீட்டுரையும் நன்றியுரையும்.

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

அழைப்பிதழ்

திங்கள், 3 மார்ச், 2014

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரிப் பயிலரங்கு (30.01.14)

   புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரித் தமிழ்த்துறை சார்பில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தொள்ளாயிரம் என்னும் பொருண்மையிலான பத்துநாள் பயிலரங்கு 21.01.2014 முதல் 31.01.2014 வரை நடைபெற்றது. தமிழ் இலக்கியங்களில் பரவலான கவனிப்பைப் பெறாத முத்தொள்ளாயிரம் முதன்முறையாக ஆய்வுப்பொருளாகக் கொள்ளப்பட்டது ஆய்வு வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஆகும். இத்தகு சிறப்புடைய பயிலரங்கினை இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் அ. செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார். அப்பயிலரங்கில் 31.01.2014 அன்று முனைவர் ஆ.மணி அவர்கள் தொல்காப்பிய அகமரபும் முத்தொள்ளாயிரமும், முத்தொள்ளாயிரப் பதிப்புநெறிகள் ஆகிய இரு தலைப்புக்களிலும், திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் விஜயராணி அவர்கள் முத்தொள்ளாயிரத்தில் கற்பனைகள் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அப்பயிலரங்கின் காட்சிகள் இவை.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்
மாட்சுமை தங்கிய மன்னர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. சேதுராமன் அவர்களின் அறிமுகவுரை.
விழா மேடையில் முனைவர் விஜயராணி, முனைவர் ஆ. மணி, முனைவர் பாலமுருகன் ஆகியோர்.

முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : தொல்காப்பிய அகமரபும் முத்தொள்ளாயிரமும், முத்தொள்ளாயிரப் பதிப்புநெறிகள்.
முனைவர் அ. செல்வராசு அவர்களின் நன்றியுரை.

 
அரங்கச்  சுவைஞர்

ஞாயிறு, 2 மார்ச், 2014

திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரிக் கருத்தரங்கு (29.02.14)

      திருச்சி, பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியின் தமிழாய்வுத்துறை சார்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் மரபு மற்றும் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்னும் பெயரிய மூன்று நாள் கருத்தரங்கு 29.01.14 முதல் 31.01.14 வரை நடைபெற்றது. முனைவர் இரா. மோரிஸ் ஜாய் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அக்கருத்தரங்கில் 30.01.14 அன்று பிற்பகலில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் பூரண சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமர்வில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் இந்திரா மனுவேல் அவர்கள் தொல்காப்பிய அகப்பொருள் மரபும் மாற்றமும் : கலித்தொகை வழி என்னும் தலைப்பிலும், புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. மணி அவர்கள் உரையாசியர்கள் பார்வையில் தொல்காப்பிய இடைச்சொல் என்னும் தலைப்பிலும், திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அ. ஹெப்ஸி ரோஸ் மேரி அவர்கள் தொல்காப்பியமும் மலையாள இலக்கணங்களும் என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். அக்கருத்தரங்கின் காட்சிகள் இவை:

அழைப்பிதழ் 
அழைப்பிதழ்  
 அழைப்பிதழ் 
அழைப்பிதழ் 
முனைவர் அ. பிறைமதி அவர்களின் வரவேற்புரை.
முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் உரை: தொல்காப்பிய பொருள்கோள் முறையியல்.
முனைவர் அ. ஹெப்ஸி ரோஸ் மேரி அவர்களின் உரை : தொல்காப்பியமும் மலையாள இலக்கணங்களும்.
முனைவர் ஆ. மணி அவர்களின் உரை : உரையாசிரியர்கள் பார்வையில் தொல்காப்பிய இடைச்சொல்.
முனைவர் இந்திரா மனுவேல் அவர்களின் உரை: தொல்காப்பிய அகப்பொருள் மரபும் மாற்றமும் கலித்தொகை வழி.

பார்வையாளர் பகுதியில் பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு.ப. கிருஷ்ணன் அவர்களுடன் முனைவர் ஆ. மணி, முனைவர் அ. ஹெப்ஸி ரோஸ் மேரி, முனைவர் மோரிஸ் ஜாய் ஆகியோர்.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...