சனி, 9 நவம்பர், 2013

தமிழ் உலகமொழி - வ.ரா. கருத்து

”குறைந்த எண்ணிக்கையுள்ள ஆங்கிலேயரும் அமெரிக்கரும் ஆங்கில பாஷையை உலக பாஷையாக்க முடிந்தது. அப்படியானால் அவர்களைப் பார்க்கிலும் எத்தனையோ மடங்கு அதிகமாயுள்ள தமிழர்கள் ஏன் தமிழை உலக பாஷையாக்க முடியாது?. இதற்காக நாம் ஒரு போராட்டத்திற்கே தயாராக இருக்க வேண்டும்.”

- 31.10.1948 அன்று இராசாசி மண்டபத்தில் நடந்த வ.ரா. மணிவிழா ஏற்புரையில் வ்.ரா. பேச்சு. தினமணி 02.01.1948 நாளிதழ்ச் செய்தி. மேற்கோள்: சிட்டி & பெ.சு.மணி, அதிசயப்பிறவி வ.ரா. விசயா பதிப்பகம், கோவை, 1999, பக். 141. 


வ.ரா. (வ. ராமசாமி ) நிழற்படம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

இரண்டாயிரம் ஆண்டுப் பழி - தினமணி தீபாவளி மலர்க் கட்டுரை

இரண்டாயிரம் ஆண்டுப் பழி
முனைவர் ஆ. மணி,
துணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தாகூர் கலைக்கல்லூரி,
புதுச்சேரி – 605 008,
மின்னஞ்சல்: manikurunthogai @ gmail.com,
வலைப்பதிவு: munaivaramani.blogspot.com

      இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவர் செய்யாத ஒரு குற்றத்திற்காக அவர்மீது பழி போட்டு வருகின்றோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?.  அறத்தின்வழியே நடந்து கொண்ட ஒருவரை நீதி தவறியவர் என்றும், காமத்தின் வயப்பட்டுத் தீமைசெய்தவர் என்றும் உரையாசிரியர்களும், சிலப்பதிகாரக் கதையை மாற்று வடிவங்களில் பாடிய முப்பதுக்கும் மேற்பட்ட பிற்கால இலக்கிய நூலாசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் குற்றம் சாற்றுவது நியாயமா? என்பதை நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா?. பிறர் தம் கடமையில் தவறியதற்காக உயிரைவிட்டும்கூடப் பெரும்பழியைச் சுமந்து நிற்கும் ஓர் அப்பாவி மனிதரைச் சிலப்பதிகாரம் நமக்கு அடையாளம் காட்டுகின்றது. வாருங்கள்! அவரை அறிந்து கொள்வோம்.

முன்கதை

   தன்னுடைய வாழ்க்கைமுறையால் செல்வம் இழந்த கோவலன், கண்ணகியின் காற்சிலம்பினை விற்று வணிகத்தைத் தொடங்கலாம் என்ற எண்ணத்துடன் மதுரை வருகின்றான். மாதரியின் இல்லத்தில் கண்ணகியை விட்டுவிட்டுச் சிலம்பினை விற்கும் நோக்கத்தில் கடைவீதிக்கு வருகின்றான். அங்குப் பாண்டியனின் பொற்கொல்லனைக் கண்டுத் தன் கையில் உள்ள சிலம்பினை விற்றுத் தரமுடியுமா? எனக் கேட்கின்றான். பொற்கொல்லன் தான் அரண்மனையிலிருந்து களவாடிய சிலம்பினைக் கோவலன் கைச்சிலம்பு ஒத்திருக்கும் தன்மையைக் கண்டுப் பாண்டியனிடம் சென்று, கோப்பெருந்தேவியின் சிலம்பினைத் திருடிய கள்வன் எனக் கோவலன்மீது பழி சுமத்துகின்றான். பாண்டியன் ஊர்க் காப்பாளரை அழைத்து சிலம்பினை ஒப்பிட்டு நோக்கி அது கோப்பெருந்தேவியின் சிலம்பாக இருந்தால், அக்கள்வனைக் கொன்றுச் சிலம்பினைக் கொண்டு வருமாறு ஆணையிடுகின்றான். ஊர்க் காப்பாளரின் விசாரணை முடியும் முன்னரே அவர்களுடன் வந்த கொலையாளியாகிய கல்லாக் களிமகனால் கோவலன் கொல்லப்படுகின்றான். சிலம்பு அரண்மனையில் ஒப்படைக்கப்படுகின்றது. கள்வன் கொல்லப்பட்டதாகப் பாண்டியனுக்குச் செய்தி கூறப்படுகின்றது. அதன்பின்னர்க் கண்ணகி வந்து வழக்குரைக்கும்வரைத் தவறிழைக்காத நிலையிலும் கோவலன் கொல்லப்பட்டது பாண்டியனுக்குத் தெரியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.    

பாண்டியன் நெடுஞ்செழியனின் இறைமைத் திறம் : காட்சிக்கு எளியன்

     கண்ணகி வந்து வழக்குரைக்கும் வரை கோவலன் கொல்லப்பட்டான் என்ற உண்மையைப் பாண்டியன் அறிந்திருக்கவில்லை. வழக்குரைகாதையின் தொடக்கத்தில் கோப்பெருந்தேவி தான் கண்ட கனவினைப் பாண்டியனிடம் கூறுவதற்காக அவனிருக்குமிடம் வருகின்றாள். பாண்டியன்  சிங்கஞ் சுமந்த இருக்கையின் மீதிருந்தான். பாண்டியனோடு அப்போது யாருமிருந்ததாகச் சிலம்பில் குறிப்புக்களில்லை. அரசனும் அரசியும் தன்மையில் இருந்த அந்த நேரத்தில்தான் கண்ணகி தலைவிரி கோலத்தாளாக வாயிலில் வந்து நிற்கின்றாள். அரசன், அரசியோடு தனிமையில் இருக்கும் காலத்திலும் குறைகூற வருவோரைச் சந்திக்கும் வழக்கமுடையனாக இருந்த காரணத்தால் வாயிற்காவலன் அரசனிடம் வந்து கண்ணகியின் வருகையைத் தெரிவிக்கின்றான். அரசியுடன் இருக்கும் தனிமை இன்பத்தைப் பொருட்படுத்தாத பாண்டியன்,  உடனடியாகக் கண்ணகியை அழைத்து வருமாறு கட்டளையிடுகின்றான். இந்த இடத்தில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கோவலனைக் கொல்லும் நோக்கமுடையவனாகவோ, தவறிழைக்கும் எண்ணமுடையவனாகவோ, மக்கள்மீது அக்கறையில்லதவனாகவோ பாண்டியன் இருந்திருந்தால் அவன் கண்ணகியைச் சந்திப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

வசை பொறுக்கும் பேருள்ளம்

            கண்ணகி வந்தவுடன் கண்களில் நீருடன் வந்திருக்கும் பெண்ணே! நீ யார்? என அன்புடன் வினவுகின்றான். கண்ணகியோ அறிவாராய்ச்சி இல்லாத மன்னா! எனத் தொடங்கித் தன்னைப் பற்றிக் கூறுகின்றாள். அரசனை அறிவில்லாதவனே எனக் கேட்ட கண்ணகியின் துணிச்சலைப் பாராட்டும் நம் உள்ளம், ஏனோ அச்சொல்லைப் பொறுத்துக் கொண்ட பாண்டியனின் பண்புள்ளத்தைப் பாராட்ட மறந்து விடுகின்றது. தன்மீதான வசைச் சொல்லை பொறுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது,  கள்வனைக் கொல்வது அரச கடமை என விளக்கமும் தருகின்றான். பண்புடமையுடன் பாண்டியன் கூறியும் கண்ணகி மீண்டும், நல்வழிப்படாத கொற்கைக்கு மன்னனே! என்றே வசை பாடுகின்றாள். இங்கு மற்றொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கண்ணகி சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வந்த அகதிநிலையினள். அவளுக்கு நீதி செய்வது என்பது பாண்டியனின் விருப்பத்தைப் பொறுத்தது. மேலும், வசைச் சொற்களை ஆண்டமைக்காகவும் பாண்டியன் அவளைத் தண்டித்திருக்க முடியும். இக்காலத்தில் ஒரு சிறு பதவியில் இருப்பவரையாவது இவ்வாறு ஒருவர் கேட்கமுடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பாண்டியனின் செங்கோன்மை புரியும்.

குற்றத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பினைத் தானே முன்வந்து வழங்கியவன்

            கண்ணகி வழக்குரைக்க வந்தவள். பாண்டியன் வழக்கினைக் கேட்டு நீதி சொல்லும் நிலையினன். வழக்குத் தொடுத்தவளே குற்றத்தை மெய்ப்பிக்கும் பொறுப்புடையவள். இன்றைய நீதிமுறையும் அதுவே. ஆனால், குற்றத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பு ஏதும் அவளிடம் இல்லை. தன் கையில் அவள் ஏந்தி வந்த சிலம்பு எந்த பயனையும் வழக்குரையில் விளைவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்களையுடையது என்கின்றாள் கண்ணகி. பாண்டியன் எம்முடைய சிலம்பும் மாணிக்கப்பரல் கொண்டதே என்று கூறியிருந்தால் கண்ணகி தண்டிக்கப்பட்டிருப்பாள். எனினும் பாண்டியன் நெடுஞ்செழியன்,  நீ சொன்னது வழக்கின் உண்மையைத் தெளிவிக்கும் நன்மொழி என்று கூறுகின்றான். மேலும், எம்முடைய சிலம்பு முத்துப் பரல்களையுடையது என்ற உண்மையையும் கூறுகின்றான். பாண்டியன் குற்றமற்றவன் என்பதற்கு அவன் கருத்தே சான்று. மேலும் குற்றத்தை மெய்ப்பிக்கும் வாய்ப்பினைக் கண்ணகிக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லாத போதும், தன் பக்கமுள்ள நியாயத்தை நிறுவிக் காட்டுவதற்காகவே அவ்வாய்ப்பினைக் கண்ணகிக்கு வழங்குகின்றான். கோவலன் கையிலிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பினைத் தானே முன்வந்து அரண்மனையிலிருந்து வருவித்துக் (கவனிக்க: காமவயப்பட்டு அரசியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கோவலனைக் கொன்று, சிலம்பினைக் கொண்டு வந்திருந்தால், அதனை அவன் அரசியிடம்தானே கொடுத்திருக்க வேண்டும். அரண்மனையில் வைத்திருந்ததன்மூலம் பாண்டியன் காமவயப்பட்டுத் தீர்ப்பளிக்க வில்லை என்பதை அறியலாம்.)  கண்ணகியிடம் அளிக்கின்றான். பாண்டியனோ, பிறரோ சிலம்பினை மாற்றியிருந்தால் வழக்கு என்னவாகியிருக்கும்? என நினைத்துப் பாருங்கள்.

உயிரைத் தந்து செங்கோல் நிமிர்த்திய செம்மல்


            கண்ணகி தன்முன் வைக்கப்பட்ட சிலம்பினை எடுத்து உடைக்கின்றாள். சிலம்பின் மாணிக்கப்பரல் பாண்டியன் வாயில் பட்டுக் கிழே விழுகின்றது. அதனைக் கண்ட அவன், இந்த உலகின் தென்னாட்டுக் காவல் என்னால் கெட்டது. நான் அரசனல்ல. கண்ணகியின் சிலம்பை இதுவரை வைத்திருந்த நானே கள்வன் என்று கூறி, தொடுக்கப்படாத மற்றொரு வழக்காகிய கண்ணகி சிலம்பைக் களவாடிய குற்றத்துக்குத் தண்டனையாக மரணத்தைத் தழுவுகின்றான். இக்கால வழக்கம்போலக் கண்ணகியின் இழப்புக்கு நிவாரணமாக இழப்பீட்டுத் தொகை வழங்கியிருந்தால் நாம் அவனுடைய கருணை உள்ளத்தைப் பாராட்டியிருப்போம் அல்லவா?. அல்லது தன்னுடைய அரசின் கடைநிலை ஊழியனால் நிகழ்ந்த தவறுக்குப் பாண்டியன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தாலும் அதில் குற்றம் ஏதுமில்லை. கணவனை இழந்த உனக்கு நானே கணவனாக இருக்கிறேன் என்று பாண்டியன் சொன்னதாகவும், கண்ணகி அதனை ஏற்றுக் கொண்டதாகவும் வருகின்ற கர்ண்ணகை கதை என்ற நாட்டுப்புறக் கதைப்பாடலும் உண்டு. எனினும் பாண்டியன் இந்த வாய்ப்புக்களையெல்லாம் நினைத்தும் பாராது, தன்னிடமே நீதி வழங்கும் அதிகாரமிருந்தும், கண்ணகி யாருமற்ற அகதி என்று நன்கு தெரிந்தும், அறத்தின்பால் நிற்கும் தன் நிலை மாறாமல், இழந்துபோன கோவலனின் உயிருக்கும், கள்வனுக்கு கொலைத்தண்டம் விதிக்கின்ற  தன் நாட்டு வழக்கம் கருதியும் தன் உயிரைத் தந்துத் தன் செங்கோன்மையை நிறுவுகின்றான். என்றாலும் சிலம்பின் உண்மைகளை உணராமலே பலரும் பாண்டியன் மீது பழிதூற்றுவது சரியா?. எந்நிலையிலும் நீதிதவறாமல் செங்கொன்மையுடன் வாழ்ந்து, பிறர் செய்த தவறாயினும் தன் உயிரையும் விட்ட பண்பாளனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் மீது இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பழிதூற்றுவது நியாயமா?. சிந்தித்துப் பாருங்கள்.

தினமணி தீபாவளி மலர்க் கட்டுரை

தினமணி தீபாவளி மலரில் சங்க இலக்கியக் காட்சிகள் என்னும் தலைப்பில் அண்மையில் குடியரசுத் தலைவரின் இளம் தமிழறிஞர் விருது பெற்ற அறுவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அதில் முனைவர் ஆ. மணியின் கட்டுரை இரண்டாயிரம் ஆண்டுப்பழி என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களுக்கும், ஓவியர்கள் கி.சொக்கலிங்கம், செந்தமிழ் ஆகியோருக்கு நன்றி. கட்டுரையின்  படப்படிகள் இதோ:





கட்டுரை அடுத்த பதிவாக வரும்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

சிலப்பதிகாரம் : கவிதையியல் - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் : நூலறிமுகம்

     புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கைப் பெற்றுச் செம்மொழித் தமிழும் சிலப்பதிகாரமும் என்னும் பெயரிய பத்துநாள் பயிலரங்கு ஒன்றினை 03.01.2013 முதல் 12.01.2013 வரை நடத்தியது. முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய அப்பயிலரங்கில் 03.01.2013 அன்று நடைபெற்ற முதல் அமர்வில் சிலப்பதிகாரக் கருத்தியல் மீளாய்வு என்ற தலைப்பில் பயிலரங்க உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. வாய்ப்பினை வழங்கிய இயக்குநர்  முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சிலம்பு நா. செல்வராசு அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்களுக்கும்  நன்றி மலர்கள். அப்பயிலரங்கின் உரைகள் தற்போது சிலப்பதிகாரம் : கவிதையியல் - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் என்னும் பெயரில் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தால் நூலாக்கம் பெற்றுள்ளன. அச்சாக்கத்தின் கலையியல் கூறுகளை உளங்கொண்டுச் செவ்வையான கட்டமைப்பில் கண்களை உறுத்தாத வகையில் மிக அழகிய நூலாக இந்நூல் மலர்ந்திருப்பது பதிப்பாசிரியர் சிலம்பு நா. செல்வராசு அவர்களின் பேருழைப்பையும் அழகியல் கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பல புதிய சிந்தனைகளைத் தாங்கிய இந்நூல் வெளிவருவதற்குப் பின்புலமாக இருந்து இயக்குகின்ற இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி அவர்களுக்கும், முனைவர் இரா. சம்பத் அவர்கள் உள்ளிட்ட நிறுவனப் பேராசிரியர்களுக்கும் தமிழுலகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.  
           2013 இல் முதல் பதிப்பு கண்டுள்ள இந்நூல் 1/8 தெம்மி அளவில் 448 பக்கங்களைக் கொண்டது. நூலின் விலை ரூ. 350. கவிதையியல் குறித்த ஏழு கட்டுரைகள், பண்பாட்டியல் குறித்த பன்னிரண்டு கட்டுரைகள், மொழியியல் தொடர்பான நான்கு கட்டுரைகள், அரசியல் தொடர்பான ஐந்து கட்டுரைகள் என இருபத்தெட்டுக் கட்டுரைகளும், நூலின் முன்முகமாக பதிப்பாசிரியர் எழுதிய பதிப்புரையும், பின்முகமாக பொருளடைவும், கட்டுரையாளர் முகவரிகளும் இடம்பெற்றுள்ளன.  ஆற்றல் வாய்ந்த புலமையாளர்களின் கட்டுரைகள் இந்நூலின் தகுதிக்கும் தகைமைக்கும் சான்று பகர்கின்றன. சில கட்டுரைகள் பல்லாண்டுகளாக நம் உள்ளத்தில் பதிந்துள்ள கருத்துக்களை வெடி வைத்துத் தகர்க்கின்றன. சில கட்டுரைகள் பழைய உண்மைகளின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சில கட்டுரைகள் இதுகாறும் நாம் அறியாத புதிய சிந்தனைகளை எடுத்துரைக்கின்றன. மொத்தத்தில் சிலப்பதிகாரம் பற்றிய புதிய நினைவுகளை இந்நூல் கட்டியெழுப்புகின்றது. பயிலரங்கில் படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் காற்றோடு கலந்துவிடாமல் ஆவணமாக்கிய முனைவர் பக்தவச்சல பாரதி, சிலம்பு நா. செல்வராசு ஆகியோர் போற்றுதலுக்குரியர். பல்துறைப் புலமையாளர்களின் கருத்தியல் சங்கமம் “ என பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களும், “ சிலப்பதிகாரம் குறித்த ஆய்வுகளில் இந்நூல் முதன்மையானதுஎன முனைவர் பக்தவச்சல பாரதி அவர்களும் மொழிவது முற்றிலும் உண்மை என்பதை இந்நூலைப் புரட்டும்போது நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

நூலின் முன்னட்டை.
நூலின் பின்னட்டை.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

வெல்லும் தூய தமிழ் - திங்களிதழ் - அறிமுகம்

    புதுச்சேரியில் சிற்றிதழ்கள் பலவாகப் பெருகி இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கிடையே தனித்தன்மையும் பீடும் உடைய இதழ் என மதிப்பிட்டால் ஒரு சிலவே அமையும். சில இதழ்கள் தனி மனிதர்களின் பெருமையைப் பறைசாற்றவே வருகின்றனவோ என எண்ணத் தோன்றும் வகையில் இருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்டு வெல்லும் தூயதமிழ் திங்கள் இதழ் அமைந்திருப்பதை அவ்விதழைப் பார்த்தவுடன் நாம் அறியலாம்.
        ஓர் இதழ் 20 ஆண்டுகளைக் கடந்து வெளிவருவதே வரலாற்றுச் சாதனை. அதுவும் உரிய காலத்தில் இடைவெளியில்லாமல் வெளிவருவது இன்றைய வணிக உலகில் எத்தகைய அருஞ்செயல் என்பதை எண்ணிப்பாருங்கள்.
      தமிழ் இதழ் எனச் சொல்லிக்கொண்டுத் தமிழ்ச் சொற்களை ஆளவோ, பிழையில்லாமல் செய்திகளை வெளியிடவோ இயலாத இதழ்களுக்கிடையே தனித்தமிழில் ஓர் இதழை வெளியிட்டுப் பரப்புவது என்பதில் எத்தனை துன்பமிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெல்லும் தூயதமிழ் இதழின் சிறப்பும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் பேருள்ளமும், தமிழ் நெஞ்சமும் விளங்காமல் போகாது. நெடுநாட்களாகவே வெல்லும் தூயதமிழ் இதழ் பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இன்றுதான் அதற்கான சூழல் அமைந்தது.
            தமிழில் பிழையற எழுதக் கற்றுக் கொள்ளவேண்டுமா?. தனித்தமிழில் உரையாட வேண்டும் என்ற எண்ணமுண்டா?. மறைமலையடிகள் ஊட்டிய உணர்வில் கலந்துருக வேண்டுமா?. இதற்கெல்லாம் தனியே சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஓர் எளிய வழியுண்டு. வெல்லும் தூயதமிழ் திங்களிதழைப் படிப்பதுதான் அது. தமிழ் உணர்வாளர்கள் இதுபோன்ற இதழ்களைப் புரப்பது போற்றுதலுக்குரியது என்பதை மனங்கொள்ள வேண்டும். தனித் தமிழ் போற்றுவோம். தமிழ் போற்றுவோம்.

வெல்லும் தூயதமிழ் இதழின் முகப்பட்டை (2013 அகுத்தோபர்).

திங்கள், 14 அக்டோபர், 2013

செம்மொழி விருதுகள் வழங்கும் விழா - 09.10.2013

         இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழுக்கான விருதுகள் விழா 09.10.2013 அன்று பிற்பகல் 12 மணிக்குப் புதுதில்லியில் உள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ’தர்பார்’ கூடத்தில் நடைபெற்றது. விருது பெறும் அறிஞர்கள் விருது பெறும் ஒத்திகைக்காக முற்பகல் 10 மணியளவில் கூடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒத்திகை நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரி நடைமுறைகளை ஆங்கிலத்தில் விளக்கினார். அத்னைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிஅலுவலர் திருமிகு. கருணாகரன் அவர்கள் தமிழில் விளக்கினார். பார்வையாளர்கள் 11 மணி முதல் வரத் தொடங்கினர்.
       இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி அவர்கள் சரியாகப் பிற்பகல் 12 மணிக்குக் கூடத்திற்கு வந்தார். அவர் வரும்போது வாத்திய இசை முழக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய நாட்டுப் பண் கருவிகளில் இசைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் அவர்கள் இருக்கையில் அமர்ந்த பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அசோக் சிங்கால் அவர்கள் விருது வழங்கும் விழாவினைத் தொடக்க, குடியரசுத் தலைவரிடம் அனுமதி வேண்டினார். அனுமதி கிடைத்த பின்னர் அறிவிப்பாளர் விருது வழங்கும் விழா பற்றிய பின்புலங்களை இந்தியில் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து முதன்முறையாகச் செம்மொழி விருதுகள், நிறுவனம் பற்றிய செய்திகளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.கோ.பூமா அவர்கள் தமிழில் எடுத்துரைத்தார். இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி கண்ட நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.கோ.பூமா அவர்களுக்கும், பதிவாளர் முனைவர் முத்துவேலு அவர்களுக்கும், நிதிஅலுவலர் திருமிகு கருணாகரன் அவர்களுக்கும், ஆய்வறிஞர்கள் பேரா. கு. சிவமணி அவர்களுக்கும், முனைவர் ப. மருதநாயகம் அவர்களுக்கும், செம்மொழி நிறுவனத்தினருக்கும்,  மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அசோக் சிங்கால் அவர்களுக்கும், மனிதவள மேம்பாட்டுத் துறையினருக்கும், குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளுக்கும் தமிழறிஞர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்குப் பின்புலமாக இருந்த தமிழ் அமைப்புக்கள் நன்றிக்குரியன.
         தமிழ் அறிவிப்புக்குப் பின்னர் முதலில் தொல்காப்பியர் விருது பற்றியும் விருதுக்குரியவர் பற்றியதுமான அறிவிப்பு இந்தியில் செய்யப்பட்டது. முதலில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பியர் விருதினைப் பெற்றார். 2010 -11 ஆம் ஆண்டுக்குரிய தொல்காப்பியர் விருதினை முனைவர் தமிழண்ணல் அவர்கள் பெற்றார்.  அதன் பின்னர் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய குறள்பீட விருதினை செக் நாட்டு அறிஞர் வாசேக் பெற்றார். பின்னர் 2009 -10 ஆம் ஆண்டுக்குரிய இளம் தமிழறிஞர் விருதுகளை முனைவர் சுரேசு, முனைவர் சே. கல்பனா, முனைவர் நா. சந்திரசேகர், முனைவர் வாணி அறிவாளன், முனைவர் சோ. முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பெற்றனர்.
      2010 -11 ஆம் ஆண்டுகுரிய இளம் தமிழறிஞர் விருதுகளை முனைவர் து. சங்கையா, முனைவர் அ. செயக்குமார், முனைவர் ஆ. மணி, முனைவர் சி. சிதம்பரம், முனைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பெற்றனர். குறள்பீட விருது பெற்ற முனைவர் சான் மார் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை.
          அனைவருக்கும் விருதுகளும் பொன்னாடைகளும் வழங்கப்பட்ட பின்னர் மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலர் அவர்கள் விழாவினை நிறைவு செய்வதற்கான அனுமதியைக் குடியரசுத் தலைவரிடம் வேண்டினார். அனுமதி கிடைத்ததும் கருவிகளின் இசையிலான நாட்டுப்பண்ணுடன்  விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து விருது பெற்றோர் குடியரசுத் தலைவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், செயலர் ஆகியோருடன் குழுப் படம் எடுத்துக் கொண்டனர். நிறைவாக, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. விழாப் படங்கள் இதோ:

 குடியரசுத் தலைவரின் வருகை
 நாட்டுப்பண் இசைத்தல்.
 முனைவர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தொல்காப்பியர் விருது பெறல்.
  முனைவர் தமிழண்ணல் அவர்கள் தொல்காப்பியர் விருது பெறல்.
  முனைவர் வாசேக் அவர்கள் குறள்பீட விருது பெறல்.
 முனைவர் சுரேசு அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் நா. சந்திரசேகரன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சோ. முத்தமிழ்ச் செல்வன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் து. சங்கையா அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் அ. செயக்குமார் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் ஆ. மணி அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
 முனைவர் சுந்தரபாண்டியன் அவர்கள் இளம் தமிழறிஞர் விருது பெறல்.
  குடியரசுத் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலர் ஆகியோருடன் செம்மொழி விருதுகள் பெற்றோர்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள்

       செவ்வியல் தமிழ் ஆய்வுக்காக இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழ் விருதுகள் கடந்த 09.10.2013 அன்று நண்பகல்12 மணிக்குப் புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி அவர்களால் வழங்கப்பட்டன. விழா பற்றிய சன் தொலைக்காட்சியின் செய்திக் காணொளிக் காட்சி இவண் தரப்பட்டுள்ளது.



ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அப்பாவின் துப்பாக்கி - நூலறிமுகம்

      புதுவையில் எனக்குக் கிடைத்த அறிவுசான்ற நண்பர்களுள் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் குறிக்கத்தக்கவர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளராகிய அவர் குறுந்தொகை மொழிபெயர்ப்பின் போது எனக்கு அறிமுகமானார். குறுந்தொகை பற்றி அவர் கேட்ட நுட்பமான வினாக்கள் குறுந்தொகை பற்றிய புதிய சிந்தனைகளுக்கு வித்திட்டதை என்னால் மறக்க இயலாது. அண்மையில் அவர் மொழிபெயர்த்துள்ள ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புதினம் காலச்சுவடு பதிப்பகம் வழியாகக் ‘கிளாசிக்’ தன்வரலாற்று வரிசை நூலாக வெளிவந்துள்ளது. அதனைப் பற்றிய ஒரு சிறு அறிமுகமாக இப்பகுதி அமைகின்றது.
     ஆசாத் செரோ செலீம் என்னும் இயற்பெயருடைய கினெர் சலீம் குர்திசுதானில் (இன்றைய ஈராக்) பிறந்தவர். தன்னுடைய பதினேழாம் வயதில் ஈராக்கை விட்டு வெளியேறி இத்தாலி சென்ற சலீம், அங்குச் சில ஆண்டுகள் வாழ்ந்தார். அதன் பின்னர் பிரான்சுக்குச் சென்ற சலீம் அங்குத் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். 2003இல் வெனிசு திரைப்பட விழாவில் சான் மார்க்கோ விருது பெற்ற ”வோட்கா லெமன்” என்ற திரைப்படம் அவருடைய திறமைக்கு ஒரு சான்று. குர்திசுதான் இன மக்களின் வரலாற்றைக் கூறுவதாக அவர் படைத்த பிரஞ்சு மொழியில் அவர் படைத்த நூல் பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரால் தமிழில் அப்பாவின் துப்பாக்கியாக மலர்ந்திருக்கின்றது. இயல்பான தமிழ்நடைக்குச் சொந்தக்காரரான நாயகரின் உழைப்பும் தமிழ்மணமும் கமழும் இப்படைப்பைப் படித்துச் சுவையுங்கள். தமிழுக்குக் கிடைத்த பிறநாட்டுச் செல்வம் இது.
   தமிழுக்குக் கொடை வழங்கிய பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களையும், இந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் திரு. கண்ணன் அவர்களையும் வாழ்த்துவோம். நூலின் அட்டைபடம் இது.
   





வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தாகூர் கலைக்கல்லூரிப் பாராட்டுவிழா (12.09.13)

   தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறையில் நேற்று (12.09.2013) பிற்பகல் 2மணியளவில் இளங்கலைத் தமிழில் உயர்மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முனைவர் ஆரா. சிவகுமாரன் அறக்கட்டளைப் பரிசளிப்பும், இளந்தமிழறிஞர் விருது பெற்ற முனைவர் ஆ.மணிக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றன. 
    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய அவ்விழாவில் தமிழ்ப்பேரவையின் பொறுப்பாளர் முனைவர் தி. செல்வம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்த்துறையின் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தன்னுடைய பேச்சில் தாகூர் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவருமாகிய முனைவர் ஆ. இரா. சிவகுமாரன் அவர்கள், நம்முடைய தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பரிசு வங்கி வருவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், முனைவர் ஆ. மணியின் ஆய்வுப்பணிகளையும் தமிழ்ப்பணிகளையும் மதிப்பிட்டுக் காட்டி மணி அவர்களுக்குக் குடியரசுத்தலைவரின் இளந்தமிழறிஞர் விருது கிடைத்திருப்பது பொருத்தமுடையதே என்றும் , மாணவர்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
    விழாவுக்கு முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள்,  மணி அவர்கள் குடியரசுத்தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருதினைப் பெற்றதன் மூலம் தாகூர் கலைக்கல்லூரிக்கும் புதுவைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், தமிழ்த்துறை பலநிலைகளிலும் சாதனை புரிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் வாழ்த்துரை வழங்கினார். மேலும் உயர்மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் எல்லா நிலைகளிலும் சாதனை படைத்து கல்லூரிக்குப் பெருமைதேடித் தருவதோடு, வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்தினார்.
             முனைவர் ஆ.இரா. சிவகுமாரன் அறக்கட்டளைப் பரிகளை வழங்கிய திரு. கமலக்கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதோடு மணி அவர்களுக்கு ஆடை அணிவித்து வாழ்த்தினார்.
              விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி, இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள், மணி அவர்களை வாழ்த்திப் பொன்னாடை அணிவித்தார். தாகூர் கலைக்கல்லூரியின் பொருளாதாரத்துறையின் தலைவர் முனைவர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் வந்திருந்து மணி அவர்களுக்கு ஆடை அணிவித்து வாழ்த்தினர்.
               முனைவர் ஆ. மணி அவர்களுக்குப் பாராட்டுரை வழங்கிய முனைவர் தி. செல்வம் அவர்கள், மணி நுட்பமான உண்மைகளை வெளிப்படுத்தி வரும் ஆய்வாளர் எனச் சான்றுரைத்தார். வாழ்த்துரை வழங்கிய முனைவர் ப. கொழந்தசாமி அவர்கள் மணி உழைப்புத் தேனீ எனப் பாராட்டினார்.
         உயர்மதிப்பெண் பெற்றுப் பரிசு பெற்ற மாணவர்கள் தே. கமலபாலன், செ. சிலம்பரசி ஆகியோர் ஏற்புரையாற்றினர். முனைவர் ஆ.மணி மிகச் சிறந்த பேராசிரியர் என மதிப்பிட்டுரைத்தனர். 
       பாராட்டுதல்களை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய முனைவர் ஆ.மணி, தன்னுடை ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் துணைநின்று, அறிவார்ந்த வழிகாட்டியாகத் திகழும் கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு.இராசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடு செய்த தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களுக்கும், தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி. செல்வம் அவர்களுக்கும், தமிழ்த்துறை, பொருளாதாரத்துரைப் பேராசிரியர்களுக்கும், பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
       மூன்றாமாண்டு மாணவி உஷா நன்றி நவின்றார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் கணவரும், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலருமாக இருந்து ஓய்வுபெற்ற திரு. ஸ்ரீதரன் அவர்கள் மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. அவ்விழாவின் காட்சிகள் இதோ:

  மாணவியர் கைவண்ணம்
மாணவியர் கைவண்ணம்
 வரவேற்புக் குழுவினர்
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் விளக்கேற்றல்.
  கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள் முனைவர் ஆ. மணிக்கு ஆடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்குகின்றார்.
 இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள், முனைவர் ஆ. மணிக்கு ஆடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்குகின்றார்.
 திரு. கமலக்கண்ணன் அவர்களுக்கு முனைவர் நா. இளங்கோ அவர்கள் ஆடை அணிவித்துச் சிறப்புச் செய்கின்றார்.
 தமிழ்த்துறைத் தலைவர் சி. பத்மாசனி அவர்களின் தலைமையுரை.
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள், மாணவர் தே.கமலபாலன் அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.
 கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்கள், மாணவி செ. சிலம்பரசி அவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.
கல்லூரி முதல்வர் கலைமாமணி, முனைவர் எ.மு. இராசன் அவர்களின் முன்னிலையுரை.
திரு. கமலக்கண்ணன் அவர்களின் வாழ்த்துரை
 முனைவர் தி. செல்வம் அவர்களின் பாராட்டுரை.
 முனைவர் ப. கொழந்தசாமி அவர்களின் பாராட்டுரை. 
முனைவர் சிவக்குமார் அவர்கள் மணிக்கு ஆடை அணிவித்து வாழ்த்துகின்றார்.
தமிழ்த்துறை மாணவர்கள் பூங்கொத்துக் கொடுத்துப் பாராட்டுகின்றனர்.
 திரு. தே. கமலபாலன் அவர்களின் ஏற்புரை. 
 செல்வி. செ. சிலம்பரசி அவர்களின் ஏற்புரை.
 முனைவர் ஆ.மணி அவர்களின் ஏற்புரை.
முனைவர் சு. தில்லைவனம், திரு. கமலக்கண்ணன், முனைவர் சி.பத்மாசனி, முனைவர் சுதர்சனம், முனைவர் நா. இளங்கோ, முனைவர் தி. செல்வம் ஆகியோருடன் முனைவர் ஆ.மணி. 
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. பத்மாசனி அவர்களின் கணவரும், தமிழ்நாடு முதலமைச்சரின் காவலராக இருந்து ஓய்வுபெற்றவருமாகிய திரு. ஸ்ரீதரன் அவர்கள், மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டுகின்றார்.


        
              

வியாழன், 5 செப்டம்பர், 2013

முனைவர் ஆ. மணி

புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் . மணி அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இளந்தமிழறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில்  நடைபெற உள்ள விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விருதினை வழங்கவுள்ளார்.
            செம்மொழி இலக்கண, இலக்கியங்களில் ஆய்வு நிகழ்த்தி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் ஐவருக்கு இளந்தமிழறிஞர் விருதுகளை  வழங்கி வருகின்றது. அவ்வகையில் அண்மையில் 2009 -10, 2010 – 11 ஆம் ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  அதில் 2010 – 11 ஆம் ஆண்டுக்குப் புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் . மணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் கா. ஆறுமுகம், . தேவகி ஆகியோருக்கு 1976 ஆம் ஆண்டில் முதல் மகனாகப் பிறந்த . மணி,  இளநிலைப் பட்டத்தைத் திருச்சி, சமால் முகமது கல்லூரியிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தை மதுரை, யாதவர் கல்லூரியிலும் பெற்றவர்.
     
    உலக, இந்திய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் பங்கேற்று 65 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். தமிழகத்திலும் புதுவையிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியுதவியுடன் நடைபெற்ற கருத்தரங்கு, பயிலரங்குகளில் வள அறிஞராகப்  பங்கேற்று 25 ஆய்வுரைகளை வழங்கியுள்ளார். இந்திய அளவிலான இரண்டு கருத்தரங்குகளையும், ஒரு பயிலரங்கினையும் இந்திய அரசு நிறுவனங்களின்  நிதியுதவி பெற்று நடத்தியுள்ளார்.  
குறுந்தொகைத் திறனுரைகள், காலந்தோறும் தமிழ் இலக்கியம், செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள், குறுந்தொகை உரைநெறிகள், ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் ஆகிய ஐந்து நூல்களை எழுதியிருப்பதோடு, பல்துறைநோக்கில் தொல்காப்பியம்தொகுதி 1, 2 ஆகிய இரு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களில் குறுந்தொகை என்னும் ஆய்வுத் திட்டத்தைச் செய்து முடித்துள்ளார்.

    புதுவை அரசுக் கல்லூரித் தமிழ்த்துறைகளில் முதன்முறையாகப் பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு உதவியோடு இதழியல், மக்கள் தகவலியல் என்னும் சான்றிதழ்ப் பாடத்தினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றார்.
            
   குறுந்தொகை உரைநெறிகள் என்னும் இவர்தம் ஆய்வு நூலினை உலகப்பேரறிஞர் ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்கள் சங்க இலக்கிய ஆய்வுகளுக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் ஆய்வு எனப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் . மணி என்னும் பெயரிலேயே தமிழ் வலைப்பூ ஒன்றினை உருவாக்கித் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் தொடர்பான செய்திகளை எழுதி வருகின்றார். தகுதியான ஆய்வுகளின் மூலம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பற்றிய புதிய பல உண்மைகளை வெளியிட்டு வரும் முனைவர் ஆ. மணி, இந்தியக் குடியரசுத் தலைவரின் இளந்தமிழறிஞர் விருது பெற்றிருப்பது உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்னும் பொன்மொழிக்குச் சான்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.



சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...