புதன், 29 பிப்ரவரி, 2012

ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள்- அறிமுக விழா 25.02.2012

       சிவகாசி, ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரித் தமிழியல் துறையில் முனைவர் ஆ.மணி எழுதிய ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் என்ற நூலின் அறிமுக விழா 25.02.2012 அன்று பிற்பகல் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையுரையாற்றிய கல்லூரி முதல்வர் முனைவர் கண்மணி அவர்கள் நூல் வெளியீடு ஒரு சுகப்பிரசவம் போன்றது என்பதை எடுத்துரைத்தார். அக்கல்லூரியின் துணைப் பேராசிரியர் முனைவர் பரமசிவம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். துணைப் பேராசிரியர் நவநீதக் கிருஷ்ணண் நூல் மதிப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் ஆங்கிலத்துறையில் பணியாற்றித் தற்போது காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் க. சத்யசாய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார். 

    சிறப்புரையும் ஏற்புரையும் ஆற்றிய முனைவர் ஆ.மணி தம் ஏற்புரையில், தம்முடைய ஆய்வுநோக்கில் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் என்ற நூல்  அக்கல்லூரியின் செயலர் திருமிகு அ.பா. செல்வராசன் அவர்களுக்கு நன்றி வெளிப்பாடாக ஆக்கப்பட்டது ஏன்? என்பதை விளக்கினார். தமிழுக்காக, தமிழ்நிகழ்ச்சிகளுக்காக அவர் வாரி வழங்கிய வள்ளன்மையை நினைவு கூர்ந்தே இந்நூல் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்ட உண்மையையும், தமிழியல் துறையில் மட்டும் ஆண்டுக்கு 40 நிகழ்ச்சிகள் நடத்தியதையும், முத்தமிழ் விழா நடத்த நாளொன்றுக்கு ஓரிலக்கம் வழங்கிய செயலரின் தமிழன்பையும், தாம் துறைத் தலைவராக இருந்த காலத்தில் தமிழ் முதுகலை வகுப்புத் தொடங்கச் செயலர் அவர்கள் ஆணை வழங்கியதையும், தமிழ் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் ரூ.1000 குறைத்ததையும் எடுத்துரைத்த ஆ.மணி இனி அக்கல்லூரியில் இளமுனைவர் (எம்.பில்.), முனைவர்ப் பட்ட ஆய்வுகள் தொடக்குவதற்குச் செயலரும் முதல்வரும் ஆவன செய்ய வேண்டும் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தொடக்கப்பட்ட பதிப்புத்துறை பழந்தமிழ்ப் பதிப்புக்களைச் செம்பதிப்புக்களாக வெளியிடும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், குறுந்தொகை ஒரு புதுப்பார்வை என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிப் பொறுப்பாளர் துணைப் பேராசிரியர் செந்தில்நாதன் நன்றிகூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


முனைவர் ஆ.மணியின் சிறப்புரை: குறுந்தொகை- ஒரு புதுப்பார்வை. மேடையில் கல்லூரி முதல்வர் முனைவர் கண்மணி அவர்கள்.
கல்லூரியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்தல். உறியடித்தல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்குக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் பரிசு வழங்குகின்றார் முனைவர் ஆ.மணி.
நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள்
நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்கள்


செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கற்பகம் பல்கலைக் கழகத் தொல்காப்பியக் கருத்தரங்கு 18.02.2012

          சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நித்நல்கையோடு கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தில் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்னும் பொருண்மையில் 16.02.2012 முதல் 18.03.2012வரை முன்றுநாட்கள் நாடளாவிய கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் மொழியியல் நோக்கில் உரையாசிரியர்கள் என்னும் தலைப்பில் முனைவர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களும், தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும் என்னும் தலைப்பில் ஆ.மணியும் உரையாற்றினர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:

முனைவர் இ. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களின் உரைக்காட்சி. பொருண்மை: மொழியியல் நோக்கில் உரையாசிரியர்கள்
கருத்தரங்கச் சுவைஞர்


முனைவர் ஆ.மணி உரைக்காட்சி. பொருண்மை: தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும் 
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்தரங்கச் சுவைஞர்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தொல்காப்பியக் கருத்தரங்கு 16.02.2012

        தமிழுக்குப் பெயர் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநிறுவன நிதிநல்கையில் தொல்காப்பியப் பதிப்புக்களும் உரைகளும் என்னும் பெயரிய நாடளாவிய கருத்தரங்கு 14.02.12 முதல் 16.02.12 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. பல்கலைக் கழகப் புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் மு. வள்ளியம்மை அவர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்தினார். 
   
       சிறப்பாக நடைபெற்ற அம்மூன்றுநாள் கருத்தரங்கின் மூன்றாம் நாள் முற்பகல் அமர்வில் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்கள் அடிகளாசிரியரின் பதிப்புக்கள் குறித்தும், முனைவர் ஆ.மணி பவானந்தர் பதிப்பு பற்றியும், முனைவர் இரா. இலட்சாராமன் ஐயா அவர்கள் சிவலிங்கனாரின் பதிப்புக்கள் குறித்தும், முனைவர் ம.சா. அறிவுடைநம்பி ஐயா அவர்கள் சோமசுந்தர பாரதியாரின் புத்துரைகள் பற்றியும் உரையாற்றினர். கடந்த ஆண்டு இ.வை. அனந்தராமையரின் கலித்தொகை பதிப்பு குறித்துப் பேசும் வாய்ப்பினை வழங்கிய பல்கலைக் கழகப் புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் ஐயா அவர்கள் இவ்வாண்டும் மற்றொரு வாய்ப்பினை வழங்கினார். அவர்களுக்கும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும், முனைவர் மு.வள்ளியம்மை அவர்களுக்கும் என் நன்றி மலர்கள். 

        பிற்பகல் நடைபெற்ற நிறைவுவிழாவில்  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்கள் பங்கேற்று நிறைவுப் பேருரையாற்றினார். இளம் ஆய்வாளர்களை எப்போதும் ஊக்குவிக்கும் பண்புடைய பேராசிரியர் அவர்களின் பேச்சு இளைய தலைமுறைக்கு ஊக்கம் தருவதாகவும் வழிகாட்டுதலாகவும் அமைந்தது. விழாவில் பேராசிரியர்கள் முனைவர் அ. சிவபெருமான், முனைவர் ஞானம், முனைவர் இரெ.முத்துராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கருத்தரங்கக் காட்சிகள் இவை:

  புலமுதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்களின் உரைப்பொழிவு
அறிமுக உரையாற்றுகின்றார் முனைவர் மு. வள்ளியம்மை
 முனைவர் ஆ.மணியின் உரைப்பொழிவு

  முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரைப்பொழிவு


 முதுமுனைவர் மா.ச. அறிவுடைநம்பி அவர்களின் உரைப்பொழிவு
கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்

 கருத்தரங்கச் சுவைஞர்
 கருத்தரங்கச் சுவைஞர்

நிறைவுப் பேருரையாற்றுகின்றார் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள். மேடையில் முனைவர் பழ. முத்துவீரப்பன், பதிவாளர், முனைவர் மு.வள்ளியம்மை ஆகியோர்.

சனி, 11 பிப்ரவரி, 2012

மதுரை வேப்பந்தோப்பு - திருக்குறள் கருத்தரங்கு 05.02.2012

      மதுரைக்கு அருகில் உள்ள தொட்டியபட்டி என்ற சிற்றூரில் உள்ள தமது வேப்பந்தோப்பில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டுதோறும் திருக்குறள் தொடர்பான ஒரு பொருண்மையில் கருத்தரங்கு நடத்தி வருகின்றார் பொறிஞர் க.சி. அகமுடை நம்பி. பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்ற இவர் திருக்குறள்மீது கொண்ட தீராக்காதலால் ஆண்டுதோறும் ஆய்வரங்குகளை நடத்திவருகின்றார் என்பது நாம் மனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள இப்பொறிஞர் அவர்கள் தம்முடை பொருட்செலவில் ஆண்டுதோறும் 200பேர் கூடும்வகையில் இயற்கைச்சூழலில்/ வேப்பந்தோப்பில் கருத்தரங்கை நடத்திவருவது போற்றுதலுக்குரியது. வருமாண்டுகளில் இன்னும் பலராக நாம் பங்கேற்பது தமிழுக்கும் பொறிஞர் அவர்களுக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாகும். 

       2012 ஆம் ஆண்டுக் கருத்தரங்கு திருக்குறளில் தவமும் துறவும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. பேராசிரியர் முனைவர் க. திருமாறன் அவர்கள் தலைமையேற்று நடத்திய இக்கருத்தரங்கில் பெரும்பேராசிரியர் முனைவர் தமிழண்ணல் தொடக்கவுரையாற்றினார். பேராசிரியர் முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள் திருக்குறளில் தவமும் துறவும் - ஒரு புதுப்பார்வை என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். முனைவர் ஆ.மணி பழந்தமிழ் மரபில் தவமும் துறவும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து திருக்குறளில் தோய்ந்த பட்டறிவுடைய கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளைப் படைத்தளித்தனர். கருத்தரங்க காட்சிகள் இதோ:

  தொடக்கவுரை நிகழ்த்திய  முனைவர் தமிழண்ணல் அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
 ஆய்வுரை நிகழ்த்திய  முனைவர் இ.கி. இராமசாமி அவர்களுக்குச் சிறப்புச் செய்தல்.
 கருத்தரங்கப் புரவலர் பொறிஞர் க.சி. அகமுடை நம்பி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்  முனைவர் இ.கி. இராமசாமி அவர்கள்.
 முனைவர் இ.கி. இராமசாமி அவர்களின் ஆய்வுரை. தலைப்பு: திருக்குறளில் தவமும் துறவும் - ஒரு புதுப்பார்வை 
 முனைவர் க. திருமாறன் அவர்களின் தலைமையுரை
கருத்தரங்கச் சுவைஞர்
கருத்தரங்கச் சுவைஞர்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

திருச்செங்கோடு,விவேகானந்தா மகளிர் கல்லூரி இலக்கணக் கருத்தரங்கு 03.02.2012

      திருச்செங்கோடு, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையில் இலக்கணக் கருத்தரங்கு ஒன்று 01.02.2012முதல் 03.02.2012 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்லூரி நிர்வாகம் தன் நிதியைக் கொண்டு  இக்கருத்தரங்கினை நடத்தியது குறிப்பிடத்தகுந்த ஒன்று. 7000 மாணவிகள் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஆசியக் கல்லூரிகளிலேயே மிக அதிக மானவியர் படிக்கும் கல்லூரி இதுதான் என்பதை அறிந்தபோது பெண்கல்வி வளர்ச்சிக்கு இக்கல்லூரி ஆற்றிவரும் அளப்பரிய தொண்டினைப் பாராட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றியது. பிறருக்கு உதவும் மனமும் நல் விருந்தோம்பல் பண்பும் இக்கல்லூரியின் சிறப்புக்குக் காரணங்கள்.  

   அன்புடனும் கண்டிப்பாகவும் நடந்து கொள்ளும் முதல்வர், பேராசிரியர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமாகப் பணியாற்றத் தூண்டும் துறைத்தலைவர், அன்பாகப் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆர்வமுடன் கற்கும் மாணவியர் என இக்கல்லூரிச் சூழல் கல்வித் தலமாக அமைந்துள்ளது.தமிழ் இலக்கணக் கருத்தரங்கினை மூன்று நாட்கள் நடத்தியதிலிருந்தே இவர்களின் திறனை நாம் அறிந்து கொள்ளலாம். இக்கருத்தரங்கின் மூன்றாம் நாள் காலை அமர்வில் பேராசிரியர் முனைவர் சேதுபாண்டியன் அவர்கள் தொடரியல் கோட்பாடு என்ற தலைப்பிலும், நான் தொல்காப்பிய இடைச்சொல் கோட்பாடு என்ற தலைப்பிலும் உரையாற்றினோம். கருத்தரங்கக் காட்சிகள் இவை:


 கல்லூரி முதல்வர், முனைவர் சேதுபாண்டியன் அவ்ர்கள், ஆ.மணி.
 பேராசிரியர் முனைவர் சேதுபாண்டியன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் செந்தில்குமார்.
  முனைவர் ஆ. மணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் செந்தில்குமார்.
 கருத்தரங்க அறிமுகவுரையாற்றுகின்றார் முனைவர் செந்தில்குமார்.
 பேராசிரியர் முனைவர் சேதுபாண்டியன் அவர்களின் உரைப்பொழிவு. பொருண்மை: தொடரியல் கோட்பாடு. 
முனைவர் ஆ.மணி அவர்களின் உரைப்பொழிவு. பொருண்மை: தொல்காப்பிய இடைச்சொல் கோட்பாடு.
 கருத்தரங்கப் பயனாளர்கள்
 கருத்தரங்கப் பயனாளர்கள்
 கருத்தரங்கப் பயனாளர்கள்


வியாழன், 9 பிப்ரவரி, 2012

சென்னை, புதுக்கல்லூரிப் பயிலரங்கு 02.02.2012

  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையுடன்  சென்னை, புதுக்கல்லூரித் தமிழ்த்துறையில் 24.01.2012 முதல் 02.02.2012 வரை பத்துநாட்கள் தொல்காப்பியப் பயிலரங்கு நடைபெற்றது. அன்பான பேச்சும் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் வாய்ந்த  பேராசிரியர் முனைவர் அகமது மரைக்காயர் இப்பயிலரங்கினை ஒருங்கிணைத்து நடத்தினார். 

     பேராசிரியர் முனைவர் ஜெயதேவன் ஐயா அவர்கள் இப்பயிலரங்கில் தொல்காப்பியமும் பொருண்மையியலும் என்ற பொருளில் உரையாற்றினார். அகராதியியல் துறையில் ஒப்பாரில்லாத ஆழ்ந்த புலமையும் எளிமைப் பண்பும் பிறருக்கு உதவும் பேருள்ளமும் வாய்த்த அவர்கள் உரையாற்றிய அரங்கில் நானும் பேசினேன் என்பதே எனக்குப் பெருமை. என்னுடைய வளர்ச்சிக்குக் காரணியாக இருந்து என்னை ஆற்றுப்படுத்திவரும் பேராசிரியர் முனைவர் இரா. கோதண்டராமன் ஐயா அவர்களுக்கும், பேராசிரியர் முனைவர் ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும் நன்றி பாராட்டல் என்கடன். பயிலரங்கக் காட்சிகள் இவை:

பேராசிரியர் ஜெயதேவன் ஐயா அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அகமது மரைக்காயர்
பேராசிரியர் ஜெயதேவன் ஐயா அவர்களின் உரைப்பொழிவு. பொருள்: தொல்காப்பியமும் பொருண்மையியலும்.
 ஆய்வாளரின் அறிமுக உரை

 பேராசிரியர் ஆ.மணி அவர்களின் உரைப்பொழிவு. பொருள்: தொல்காப்பிய முப்பொருள் கோட்பாடும் திணைக்கோட்பாடும்.
 பேராசிரியர் ஜெயதேவன், பேராசிரியர் கௌது மீரான் உள்ளிட்ட அவையினர்
 நினைவுப்பரிசு வழங்கல் 

 பயிலரங்கப் பயனாளர்கள்
 பயிலரங்கப் பயனாளர்கள்


புதன், 8 பிப்ரவரி, 2012

காரைக்கால் அவ்வையார் கல்லூரிச் சங்க இலக்கியப் பயிலரங்கு - 01.02.12

   காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும் வரலாற்றுத்துறையும் இணைந்து சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் வணிக மும் அரசியல் போக்குகளும் கடல் வணிக வரலாறும் என்னும் பொருண்மையில் சங்க இலக்கியப் பயிலரங்கு ஒன்றினைச் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையுடன் 01.02.2012 முதல் 10.02.2012 வரை நடத்தி வருகின்றன. அவ்வையார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன், வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மாணிக்கம் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். 

         முனைவர் சிவ. மாதவன் அவர்கள் புதுவை மாநிலத்திலேயே முதன்முறையாகத் தாகூர் கலைக் கல்லூரியில் தொல்காப்பியப் பயிலரங்கினை நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர். காரைக்கால் பகுதியிலும் அவரே முதன்முரையாக இப்பயிலரங்கினை நடத்திவருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. கடுமையான உழைப்பும் கற்றோரைப் பாராட்டிக் கைதுக்கிவிடும் பேரன்பும் கொண்ட பேராசிரியர் சிவ. மாதவன் அவர்கள் நடத்திய இப்பயிலரங்கில்   சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு அவர்கள் பழந்தமிழிலக்கியத்தில் சட்டநெறிகள்  என்னும் பொருண்மையில் மிகச்சிறந்த உரை நிகழ்த்தினார். பகட்டில்லாமல் பழகுகின்ற பண்பும் இனிமையாகப் பேசி ஆற்றுபடுத்தும் திறனும் உடைய பேராசிரியர் முத்துவேலு அவர்கள் நிறுவனத்தின் பதிவாளராக அமைந்தது தமிழுக்கு வாய்த்த நற்பேறாகும். அவர்களொடு நானும் உரையாற்றியது என் வாழ்வின் மகிழ்ச்சியானதொரு நிகழ்வு.  பயிலரங்கக் காட்சிகள் இவை.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு அவர்களை அறிமுகம் செய்து வைக்கின்றார் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவ. மாதவன்

 சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பேராசிரியர் முத்துவேலு அவர்களின் உரைப்பொழிவு. பொருண்மை: பழந்தமிழிலக்கியத்தில் சட்டநெறிகள் 
 முனைவர் ஆ. மணி அவர்களை அறிமுகம் செய்து வைக்கின்றார் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவ. மாதவன்
முனைவர் ஆ.மணி அவர்களின் பயிலரங்க உரை. பொருண்மை:  சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் குறுநில மன்னர் வரலாறு. 
பயிலரங்கப் பார்வையாளர்கள் 
பயிலரங்கப் பார்வையாளர்கள்
 பயிலரங்கப் பார்வையாளர்கள்
 பயிலரங்கப் பார்வையாளர்கள்





சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...